Monday 28 April 2014

ஸ்ரீ துரையப்ப சாஸ்தா திருக்கோயில் ஸ்தல வரலாறு ( Duraiyappa Sastha Temple, Agaram, Maramangalam Post, Tuticorin District)

ஸ்ரீ துரையப்ப சாஸ்தா துணை
ஸ்ரீ துரையப்ப சாஸ்தா திருக்கோயில்
ஸ்தல வரலாறு
தாமிரபரணி நதிக்கரையின் கழிமுகப் பகுதியான திருச்செந்தூர், புன்னைகாயல், ஆதிச்சநல்லூர்,கொற்கை,மாறமங்கலம், ஆத்தூர்,முக்காணி போன்ற பகுதிகள் ஆதியில் சம்ஹாரண்யம் என்று விளங்கி உள்ளதாக ஸ்கந்தபுரணம் கூறுகிறது. இப்புராணத்தில் ஷேத்திர வைபவ காண்டத்தில் சம்ஹார மகாத்மியம் என்ற பகுதியில் இப்பகுதியில் பேசப்படுகின்றன. இவற்றுள் கொற்கையில் உள்ள அகரம் மன்னர்கள் காலத்தில் வீரபாண்டிய சதுர்வேதி மங்கலம் என விளங்கி உள்ளதை மாறமங்கலம் கோயில் கல்வெட்டு செய்திகளால் அறியலாம்.
       இப்பகுதியை சுற்றி கண்ணகி கோயில் அக்கசாலை விநாயகர் கோயில், சந்தரசேகரர் வீற்றிருந்த பெருமாள் கோயில்கள் உள்ளன. இருப்பினும் சம்ஹாரண்யத்தை காக்கும் தெய்வமாக அகரம் துரையப்ப சாஸ்தா விளங்குகிறார். இவருக்கு ஆதியில் தாலமுத்து சாஸ்தா என்ற திருநாமமும் அதன் பின்னர் துறையப்பர் என்ற திருநாமமும் விளங்கி உள்ளது. இவர் தற்போது துரையப்ப சாஸ்தா என்றே அழைக்கபடுகிறார்.
இவர் அழகான நீல நிறம் கொண்ட திருமேனியுடன் நெற்றியில் கஸ்தூரி திலகமும், ஒளிவீசும் கிரீடமும், சுருள் சுருளான தலை முடி, காதுகளில் குண்டலங்கள், இரு கரங்கள் கொண்டவராக பிரம்மச்சாரி வடிவத்தில் யோகநிலயில் காட்சி தருகிறார். இவரது திருக்கோயிலின் பின்புறம் பனை மரம் தல விருட்சமாக விளங்குகிறது.
ஒரு சமயம் தபசு செய்யக்கூடிய  தவசீலர்கள் பலர் ஒன்று சேர்ந்து இப்பகுதியில் ஒரு வேள்வியயை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது மகாதபசியான ஒரு முனிவர் அங்கு வந்தார்.
அவரைக் கண்டதும் மற்ற தவசீலர்கள் எழுந்து விதிப்படி அவரை வணங்கி பூஜித்தனர். அதில் ஆனந்தம் அடைந்த முனிவர் அங்கிருந்த தடாகத்தில் நீராடி தாலமரத்தடியில் பத்மாசனம் செய்து கொண்டு ஐம்புலன்களையும் அடக்கி உத்தம மந்திரத்தை கூறிக்கொண்டு தவம் இருந்தார். அப்போது ஹரிஹர புத்திரனாகிய சாஸ்தா தனது பரிவாரங்களுடன் அவருக்கு காட்சி தந்தார்.
இதை கண்ட முனிவர்கள் கண்களில் ஆனந்தம் பொங்கியது. அவர் சாஸ்தாவை பணிந்து வணங்கி தலையில் அஞ்சலி பந்தம் செய்து கொண்டு இருந்தார். இதை கண்ட சாஸ்தா சந்தோஷம் அடைந்து “முனிவரே உமக்கு என்ன வரம் வேண்டும் கேளும்” என்று சகலரும் பார்த்திருக்க கம்பீரமாக கூறினார். அதை கேட்ட முனிவர் “ஐயனே தாங்கள் சேனை வீரர்கள், பூதகணங்கள் எல்லாவற்றையும் தவிர்த்து ஆயுதம் ஏதும் இல்லாதவராக பிர்ம்மச்சார்ய ரூபனாக திருக்காட்சி தந்தருள வேண்டும்” என்றார்.
இதை கேட்ட சாஸ்தா முனிவரை நோக்கி “முறைப்படி நீங்கள் என்னை நோக்கி தவம் செய்தால் தாங்கள் வேண்டிய காட்சியை தந்தருள்வோம்” என்று கூறி மறைந்தார். இதை கேட்ட முனிவர்களும் தவசீலர்களும் ஆனந்தத்துடன் பல ஆண்டுகாலம் தவம் செய்து வந்தனர். இதில் மகிழ்ந்த சாஸ்தா யாக முடிவில் முனிவரின் விருப்பம் அனைத்தும் ஈடேறும் வண்ணம் பிரம்மச்சார்ய ரூபனாக திருக்காட்சி தந்தருளி தடாகத்தின்  அருகில் தாளாமரத்தடியில் வாஸம் செய்தார்.
எனவே இங்குள்ள இறைவனுக்கு ஆதியில் தாலமுத்து சாஸ்தா என்று திருநாமம் ஏற்பட்டது.  இவரை துறைமுகப் பட்டணத்தில் முத்துக்குளிப்போரும், வணிகர்களும் , அந்தணர்களும் மற்ற ஏனையோரும் சுதந்திரமாக பயமில்லாமல் வழிபட்டு வந்ததால் இவருக்கு துறையப்ப (துறைமுகம்) சாஸ்தா என்ற திருநாமம் ஏற்பட்டது. அதுவே தற்போது மருவி துரையப்பர் என்றாகியுள்ளது.

சாஸ்தா மகாத்மியத்தில் துரையப்பர்

கொற்கை நகரில் வணிகன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் தாலமுத்து சாஸ்தாவை வணங்கி பின் தொழில் விஷயமாக கடலில் கட்டுமர பயணம் மேற்கொள்வான். ஒருநாள் திடீரென்று சூறாவளி சுழன்று வீசியது. அவன் பயணம் செய்த கட்டுமரப்படகு சுக்கு நூறாகியது. கடலில் தூக்கி எறியப்பட்ட அவன் தன்னை காப்பாற்றிக்கொள்ள சாஸ்தாவை வேண்டி கதறினான். ஆனால் சாஸ்தா வரவில்லை. விநாடி நேரத்தில் அவன் அருகில் ஒரு மிதப்பு பலகை மட்டும் மிதந்து வந்தது. அதைப்பிடித்துக்கொண்டு இருந்தவன் மீது கட்டுமரத்தில் இருந்து உடைந்து சிதறிய பாகங்கள் இடித்து தள்ளின. இதைக்கண்டு அவனுக்கு ஆத்திரம் வந்தது. “கடவுளே உன்னை தினந்தோறு வழிபட்டு வருகிறேன், நான் ஆபத்தில் உள்ள நேரத்தில் கூட எனக்கு உதவி செய்ய நீ நேரில் வரவில்லையே” என்று புலம்பிக் கொண்டே இருந்தான். பின்பு மிதப்பு பலகையயை பிடிதுக்கொண்டே மயங்கி விட்டான். மயங்கிய அவனை கட்டுமரத்தில் உடைந்த பாகங்கள் இடித்து தள்ளி ஒரு வழியாக கரை சேர்த்து விட்டன.
கண் விழித்து பார்த்த அவன் எழுந்து கோபாவேசமாக புறப்பட்டு சாஸ்தா கோவிலுக்கு வந்தான். அங்கு “ஏ கடவுளே! கதறினேன், அலறினேன், நீ வரவில்லை உனக்கு கல் மனதா” என்று கத்தினான். அப்போது ஒரு ஆசிரீரி வாக்கு கேட்டது. “வணிகனே! நான் மிதப்பு பலகையாக வந்தேன், உன்னை இடித்து தள்ளிய மரப்பலகையாக வந்தேன், என்னால் தான் நீ உயிர் பிழைத்தாய்” என்று ஒலித்தது. இதைக்கேட்ட வணிகன் ஒரு நிமிடம் யோசித்தான். பதில் கிடைத்தது. பிறகென்ன சாஸ்தாவை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி நித்ய பூஜைகள் தடையில்லாமல் நடக்க வழி செய்தான் என்று சாஸ்தா மகாத்மியத்தில் அகரம் துரையப்ப சாஸ்தாவின் பெருமை பற்றி குறிபிட்டுள்ளது.
பழமை புராண சிறப்பு, மூர்த்தி, தலம், தீர்த்தம், இவைகளால் பெருமைப்பட விளங்கும் இக்கோயில் நித்ய பூஜைகளும், தைப்பூசம் , தை மற்றும் ஆனி மாத உத்திராட தினங்கள், வருஷாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. பங்குனி உத்திரம் மிக சிறப்பாக நடைபெறுகிறது.
ஸ்தல பெருமை
       தென்பாண்டி நாடே பழம்பதி. “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று நாயன்மார்கள் தென்பாண்டி நாட்டின் பெருமையைப் போற்றி உள்ளனர். மேலும் மனித நாகரீகத்தின் முதல் துகள்கள் தென் பாண்டி நாட்டில் அதுவும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் தான் கிடைதுள்ளன. முச்சங்க மரபு, கடல்கோள் மரபு போன்றவைகளும் தென் பாண்டி நாட்டை போற்றுகின்றன. பழமையை நினைவுபடுத்தும் பிராமிக் கல்வெட்டுகளும் இப்பகுதியில் தான் ஏராளமாக உள்ளன.
       இது போன்ற ஏராளமான சிறப்புகளைக் கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையின் கழிமுகப் பகுதியான ஆதிச்சநல்லூர், காயல்பட்டினம், கொற்கை மாறமங்கலம், அகரம் போன்ற பகுதிகள் இந்தியாவில் காணப்படும் மிகப்பழமையான தாழிக்காடாகும்.
சிந்து சமவெளி நாகரீகம், டைமாபாத் போன்றவைகளுக்கு ஈடாக பழமையான படிமங்கள் மண்பாண்டங்கள் கரித்துண்டுகள் இங்கு தான் கிடைத்துள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொற்கையின் சிறப்பு
       தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொற்கை முன்பு முத்துக்குளியலுக்கு சிறந்த இடமாக விளங்கி உள்ளது. இதை முத்துப் பகுப்பிற் கொற்கை முன்துறை நற்றினையும் கொற்கையம் பெருந்துறை முத்து என்று அகநாநூறும் புகழ்ந்து போற்றி உள்ளன. ஆரம்பத்தில் கடலோரம் அமைந்திருந்த இப்பகுதி தற்போது கடலில் இருந்த 9 கி.மீ. தொலைவுக்கு வெளியே உள்ள பகுதியாகவே விளங்குகிறது.
       கடந்த நூற்றாண்டில் கால்டுவெல் (Ri 18779/877P (1881) இப்பகுதியில் அகழ்வாய்வு செய்தார். அவர் தன் அறிக்கையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனித நடமாட்டம் ஆரம்பமாகிவிட்டது என்று குறிப்பிடுகிறார். 1970-ல் மேற்கொண்ட அகழ்வாய்வு மூலம் கி.மு. 6ம் நூற்றாண்டு மண்பாண்டங்களும் எச்சங்களும் கிடத்துள்ளன்.
       இது தவிர கொற்கையில் விளங்கிய துறைமுகத்தில் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து அகில், சந்தனம், ஜாதிக்காய், லவங்கம், இலவம்பஞ்சு போன்றவைகளும் குதிரைகளும் இறக்குமதியாகி உள்ளன. தவிர சோழ மன்னர்களின் நகரங்களான உறையூர், காவிரிப்பூம்பட்டினம் போன்ற நகரங்களுக்கு ஈடாக கொற்கை பாண்டிய மன்னர்களும் ஒரு பூம்புகாரை உருவாக்கி உள்ளனர். இதற்கு இங்குள்ள கண்ணகி கோயில், அக்கசாலை விநாயகர் கோயில் போன்றவைகளே சான்றாகும். இப்பாண்டிய மன்னர்களின் வாழ்வோடும் வளத்தோடும் இணைந்து விளங்கிய துறைமுகமாக கொற்கைமாறமங்கலம், அகரம், ஆகிய இடங்கள் விளங்கி உள்ளன. எனவே பாண்டிய மன்னர்கள் கொற்கைவேந்து, கொற்கை கோமான் என்று தங்களை அழைத்துக்கொண்டனர். மேலும் இம்மன்னர்கள் இப்பகுதியை பராந்தக நாட்டு வீரமங்கலம் எனவும் அகரம் என்ற பகுதியை பராந்தகன் சதுர்வேதி மங்கலம் எனவும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு கொற்கை பாண்டிய மன்னர்கள் புகழ்ந்த பகுதியே இன்றைய அகரம் (அந்தணர் குடியிருப்பு) ஆகும். இங்கு தான் துரையப்ப சாஸ்தா கோயில் கொண்டு வேண்டுவோருக்கு வேண்டும் பல வரங்களை தந்தருளி வருகிறார்.
       யோக நிலயில் காட்சி தரும் இவரது திருக்கோயில் கருவறை அர்த்த மண்டபம் முன் மண்டபம் ஒரு சுற்று பிரகாரம் இவைகளால் ஆனது. கோயிலுக்கு பின் உள்ள தடாகமே தீர்த்தமாகும். தல விருட்சம் பனை மரம். அர்த்த மண்டபத்தில் சாஸ்தாவின் வாகனங்களாகிய யாணை, குதிரை போன்ற வாகனங்கள் காட்சி தருகின்றன. முன் மண்டபத்தில் பரிவார தெய்வங்களாக ஆதித்யர், அம்பிகை, விஷ்ணு, விநாயகர், மகேஸ்வரர் போன்ற அருளும் தெய்வங்களும், வெளியே மாட தேவதைகளும், காவல் தெய்வங்களும் எழுந்தருளி உள்ளனர்.
      



துரை வழிபட்ட துரையப்பர்

       ஒரு சமயம் இப்பகுதி கடலுக்கு மிக அருகாமையில் இருந்தது. இப்பொழுது கடலுக்கு சற்று தொலைவில் உள்ளது. அச்சமயத்தில் ஒரு ஆங்கிலேய கப்பல் கடுமையான புயல் மழையில் சிக்கி கரையை அடைய போராடிக்கொண்டிருந்தது.
       அப்பொழுது அவர்களுக்கு உதவ முன் வந்த சாஸ்தா இத்திருக்கோயிலில்‌ இருக்கும் பனை மரத்தின் உச்சியிலிருந்து ஒரு ஒளியை அனுப்பி அவர்களுக்கு கரையை காட்டினார். கப்பலும் புயல் வெள்ளத்திலிருந்து மீண்டு கோயிலை ஒட்டிய கரையை அடைந்தது. வெள்ளைக்காரரான கப்பலின் தலைவன் சாஸ்தாவை வணங்கியதால் இவருக்கு துரையப்ப சாஸ்தா என பெயர் வந்தது எனவும் சொல்லப்படுகிறது. இத்திருக்கோயிலின் தல விருட்சமாக அந்த பனை மரம் விளங்குகிறது. “தபசுராயர்” என்ற பெயரில் தல விருட்சம் போற்றப்படுகிறது.

கோயில் அமைவிடம்

       இத்திருக்கோயில் தூத்துக்குடி மாவட்டம் மாரமங்கலம் கிராமம் அகரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. கோயிலுக்கு செல்வதற்கு தூத்துக்குடியில் இருந்து  திருச்செந்தூர் செல்லும் வழியில் பழையகாயல் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயிலை அடையலாம். மிகவும் பழமையும் பெருமையும் சிறப்பும் வாய்ந்த திருக்கோயில் இந்த ஸ்ரீ துரையப்ப சாஸ்தா கோயில். வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் அருளும் கழியுக தெய்வமாக விளங்குகிறார். இவர் சுமார் 150 குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறார்.
      
       இத்ததிருக்கோயிலை திரு. R. ஹரிஹரன் அவர்கள் பல ஆண்டுகளாக சிறப்பான முறையில் பூஜைகள் செய்தும், கோயிலை நிர்வகித்தும் வருகிறார். மூன்று தலைமுறைகளாக இவரது குடும்பத்தினர் பூஜை செய்து வருகின்றனர்.
இவரை தொடர்புகொள்ள: 9940869499 & 04630 – 275158.


ஓம் பூதநாத சதானந்த ஸர்வ பூத தயாபர
ரக்ஷரக்ஷ மஹா பாஹோ சாஸ்திரே துப்யம்
நமோ நமஹ:


சுபம்

Sri Duraiyappa Sastha Temple, Agaram, Maramangalam Post, Tuticorin District.